என் தலைவனை பற்றி பேச என்ன தகுதி உள்ளது...? அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாயும் நந்தகுமார் எம்.எல்.ஏ.
வேலூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி பேச அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எந்த தகுதியும் இல்லை என வேலூர் மத்திய மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று நலமடைந்த அமைச்சர் செல்லூர் ராஜூ சில வாரங்கள் ஓய்வில் இருந்த நிலையில், இப்போது மீண்டும் ஆய்வுக்கூட்டம் உள்ளிட்ட பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அன்று வேலூர் சென்ற அவர் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் வடிவேலு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று திரைப்படத்தில் கூறியது போல் மு.க.ஸ்டாலின் தனது இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக அரசை குறை சொல்வதாகவும், மக்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது அரசை குறை கூறி அறிக்கைகள் வெளியிடுவதாகவும் விமர்சித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த விமர்சனத்திற்கு கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார் வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ''தெர்மக்கோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூவுக்கு என் தலைவனை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. வந்தோமா ஆய்வுக்கூட்டத்தை நடத்தினோமா எனச் செல்லாமல் என் தலைவரை வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியம் அவருக்கு என்ன வந்தது. அரசு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு அங்கு என் தலைவர் பெயரை இழுத்தது ஏன்?
யார் இந்த அங்கி தாஸ்.. பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் செயல்பட்டாரா? சர்ச்சைக்கு என்ன காரணம்!
''செல்லூர் ராஜூ அடிக்கடி வேலூர் வருவதற்கான ரகசியத்தை சொல்லட்டுமா, தனிமனித நாகரீகம் கருதி அமைதிகாக்கிறேன். எங்களுக்கு என்ன எதுவுமே தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர். ஆய்வுக்கு வந்தவர் சர்க்கியூட் ஹவுசில் தங்காமல் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியதற்கான காரணத்தை நான் கூறவா? இனிமேலாவது வார்த்தைகளை கவனமாக அவர் பேச வேண்டும்''. இவ்வாறு திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார் அமைச்சர் செல்லூர் ராஜூ மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.