தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன.? வெள்ளை அறிக்கை கேட்கும் காங்.,
வேலூர்: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில், இதை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாநில அரசை தமிழக காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.
பொதுமக்களுக்கு சீரான குடிநீரை விநியோகிக்க வேண்டிய கடமையிலிருந்து தமிழக அரசு தவறிவிட்டது என குற்றம்சாட்டினார். பருவமழை எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது என்ற வானிலை மையத்தின் அறிக்கையை அறிந்து, முன்னெச்சரிக்கையாக ஏரி குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு இறங்கியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தண்ணீரை சேமித்திருக்க முடியும்.
சரியான திட்டமிடல் இல்லாததால் தற்போது நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் குடிநீரை விநியோகிக்க முடியும். ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என 10 நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் இத்திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்றே தெரியவில்லை
சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என்ற அழகிரி, காவிரி ஒப்பந்தத்தின் படி தமிழகத்தை கேட்காமல் அணை கட்ட அனுமதிக்கும் அதிகாரம் மத்திய நீர்வளத்துறைக்கு இல்லை என்றார்.
காங்கிரஸ் கட்சியை இனிவரும் காலங்களிலும் ராகுல் காந்தி தான் வழி நடத்துவார். அதுவே ஒட்டு மொத்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் விருப்பமாக உள்ளது.
தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்தான் ஒரு கட்சியை வழிநடத்த முடியும். தலைவராக திணிக்கப்படுபவரால் தலைவராக நீடிக்க இயலாது. அந்த வகையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் காந்தியை தவிர வேறு எந்த தலைவராலும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த இயலாது.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார் நாட்டில் மதவாதம் தீவிரவாதத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்