விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்றால் தான் டிரைவிங் லைசென்ஸ்.. வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் அறிமுகம்
வேலூர்: சாலை விபத்துகளை குறைக்க 45 நிமிடம் விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்றால் தான் ஓட்டுனர் உரிமம் கிடைக்கும் என தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதிலும் நாட்டிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகள் நடப்பதில் முன்பு வேலூர் முதலிடத்தில் இருந்தது. ஆனால் விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், தற்போது வேலூரில் சாலை விபத்துகள் குறைந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் ஆர்டி அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்கள் 45 நிமிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் கட்டாயம் பங்கேற்று சான்று பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்படி பங்கேற்று சான்று பெற்றால் தான் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்ற நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு வகுப்பு தமிழகத்திலேயே, வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தான் முதல் முறையாக துவக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு வகுப்பில் சாலை விபத்துகள் எதனால் ஏற்படுகிறது, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த சாலை விபத்துகளின் வீடியோ தொகுப்பு சாலை விதிகள் என்னென்ன, வாகனத்தில் வலது அல்லது இடது பக்கம் திரும்பும் போது என்ன சிக்னல் செய்ய வேண்டும் என்பது குறித்து ஏராளமான விழிப்புணர்வு தொகுப்புகள் அடங்கிய வீடியோக்கள், எல்இடி திரை மூலம் காட்டப்படுகிறது.
இந்த வகுப்பில் பங்கேற்றவர்கள் கூறுகையில், வாகனத்தை ஓட்டி காண்பித்து உரிமம் பெறுவது ஒருபக்கம் இருந்தாலும், இது போன்ற விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்பது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் அதிவேகமாக செல்வதையும், அஜாக்கிரதையாக செல்வதையும் தவிர்க்க வேண்டும். தலைக்கவசம் அணிந்திருந்தால் பலர் விபத்துகளில் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்பதை இந்த விழிப்புணர்வு வகுப்புகளில் பங்கேற்றதன் மூலம் தெரிந்து கொண்டதாக குறிப்பிட்டனர்.
எனவே சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிப்போம் என உறுதிபடவும் விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்