உருகி மருகி பேசிய துரைமுருகன்.. உயிரை கொடுத்து வேலை பார்த்த கதிர் ஆனந்த்.. பரிசளித்த வேலூர் மக்கள்
துரைமுருகனின் கனவு நனவாகி வருகிறது
சென்னை: எத்தனையோ தடைகள், போராட்டங்கள், கல்லடிகள், சர்ச்சைகள், விமர்சனங்களை தாண்டி மகனை எப்படியாவது எம்பி.யாக்கி விட வேண்டும் என்று துரைமுருகனின் உச்சக்கட்ட துடிப்பினை நம்மால் கேட்க முடிந்தது.. இப்போது மகன் வெற்றியால் ஏகப்பட்ட வெற்றி பூரிப்பில் உள்ளார் துரைமுருகன்!
மகனை வேட்பாளராக அறிமுகப்படுத்திய நாளன்று தொகுதி மக்களிடம் துரைமுருகன் அன்று கண்ணீர் விட்டு மனம் உருகி பேசிய பேச்சு இது:
"வேலூர் தொகுதி மக்களுக்கு என் மகனை தத்துக்கொடுக்கிறேன். இனிமேல் அவர், அவர், உங்கள் வீட்டுப் பிள்ளை. என் பையன் அமெரிக்காவில் படித்தவர்.
அறிமுகம்
அங்கே ஒரு லட்சம் டாலர் சம்பளம் தர்றதாக சொன்னாங்க. ஆனா அதையெல்லாம் வேணாம்னு சொல்லிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். என் பையன் அரசியலுக்கு புதுசு கிடையாது. கலைஞர்தான் தூக்கிவளர்த்தார். அதனால என்னை பார்த்து, அவருக்கு ஓட்டு போடுங்கள்" என்றார்.
ஓபன் டாக்
ஒரு பழுத்த அரசியல்வாதி.. திமுகவின் மூத்த தலைவர்.. எத்தனையோ பதவி, பொறுப்புகளை வகித்தவர்.. கருணாநிதியின் செல்ல பிள்ளை.. இவ்வளவு அங்கீரம் பெற்ற துரைமுருகன் இப்படி பேசியது வியப்பாக இருந்தது. சொந்த நலனுக்காக, குடும்பத்துக்காக, இவ்வளவு காலம் இப்படி துரைமுருகன் ஓபனாக பேசியதே இல்லை.
சீனியர்கள்
தன்னுடைய மகனை எப்படியாவது எம்பியாக்கி விடுவதுதான் இவரது ஒரே லட்சியம் என்று அன்றுதான் நமக்கு தெரிந்தது. இது ஒரு புறம் இருந்தாலும் 2 விதமான தர்ம சங்கடங்களை துரைமுருகன் சந்தித்தார். மகனுக்கு சீட் வாங்கிவிட்டதால், உள்ளூர் திமுகவினரின் அதிருப்திக்கு ஆளானார். எத்தனையோ சீனியர்கள் இருந்தும், வாரிசு அடிப்படையில் துரைமுருகனும் இப்படி நடந்து கொண்டாரே என்ற முணுமுணுப்புகள் எழுந்தன. இதனால் உள்ளடி வேலைகள் தொகுதிக்குள் நடந்தாலும் அதை துணிச்சலுடன் சந்திக்க தயாரானார் துரைமுருகன்.
வாதம்
இரண்டாவதாக, பணம் பறிமுதல் விவகாரம்.. இந்த விஷயத்தில் உண்மையிலேயே நொறுங்கி போய்விட்டார் துரைமுருகன். ஏற்கனவே இருதய நோயாளியான இவர், இந்த சம்பவத்துக்கு பிறகு அடிக்கடி ஆஸ்பத்திரி செல்லும் அளவுக்கு உடல், மனம் கெட்டு அவதிப்பட்டார். "எங்களிடம் மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு போகவில்லை, எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிதான்" என்று கூப்பாடு போட்டு கொண்டே இருந்தார். தன் தரப்பு வாதத்தை விடாமல் தொடர்ந்து எடுத்து வைத்து கொண்டே இருந்தார்.
சந்தோஷம்
இறுதியில், தொகுதி மக்கள் துரைமுருகனை கைவிடாமல் பார்த்து கொண்டனர். தொகுதியில் இதுகாலம்வரை துரைமுருகன் செய்த நலத்திட்டங்களோ அல்லது மக்கள் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையோ, மரியாதையோ, பாசமோ எதுவென்று சொல்ல தெரியவில்லை.. இப்போது ஒட்டுமொத்த விசுவாசமும் துரைமுருகன் பக்கம் திரும்பி விட்டது. மகனின் வெற்றியைவிட துரைமுருகனுக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் பெரிசாக இருந்துவிட போகிறது?!