வேலூரிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போக விடமாட்டோம்.. போராட்டம் நடத்துவோம்.. துரைமுருகன் ஆவேசம்
Recommended Video
வேலூர்: வேலூரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் ஒரு போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்காக நாள்தோறும் மக்கள் "போராட்டம்" நடத்தி வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். தண்ணீர் பிரச்சினைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்பதே தமிழகத்தின் குரலாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்றைய தினம் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வறண்ட ஏரிகள்
அப்போது செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டுவிட்டது. இதே காலகட்டத்தில் 2018-ஆம் ஆண்டு 3 டிஎம்சி தண்ணீர் இருந்தது.
சென்னைக்கு தண்ணீர்
அந்த நீரும் இந்த ஆண்டு வறண்டு விட்டது. எனினும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தேவையான குடிநீர் அரசு வழங்கி வருகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.
திமுக பொருளாளர் துரைமுருகன்
இதற்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினையை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. வேலூரில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
கடவுளிடம் முறையீடு
அவர் கூறுகையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும். தண்ணீர் பிரச்சினை குறித்து சட்டசபையில் திமுக எடுத்துரைக்கும். ஆளும் அரசிடம் மக்கள் முறையிடுகிறார்கள். ஆனால் அரசோ ஆண்டவனிடம் முறையிடுகிறது. கடவுளிடம் முறையிடுவதன் மூலம் தண்ணீரை பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்றார் துரைமுருகன்.