ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதல்.. முன்னாள் எம்எல்ஏ, மனைவி உள்பட 3 பேர் பலி
வேலூர்: ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1991-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தரவேல். ஜெயலலிதா மறைந்த பிறகு தினகரன் அணியில் இணைந்தார். இவர் தற்போது திருப்பத்தூர் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் சுந்தரவேல் தனது குடும்பத்தினருடன் ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கன்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.
இதில் கார் முற்றிலும் சேதமடைந்து லாரியின் அடியில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல், மனைவி, கார் டிரைவர் ஆகியோர் பலியாகிவிட்டனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.