ஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்தில் வீட்டிலிருந்த தந்தை- மகள் வெட்டி படுகொலை
வேலூர்: ஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்தில் வீட்டிலிருந்த தந்தை- மகள் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மோப்ப நாய் வரவழைத்து போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூர் ஜார்தான் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி பாஞ்சாலையுடன் வேப்பங்குப்பம் ரங்கன் கொட்டாய் பகுதியில் அன்ஷர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் கடந்த 25 வருடங்களாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் பொன்னுசாமி (42), அவரது மகள் 10 வயது சிறுமி தீபா ஆகிய இருவரையும் கழுத்து மற்றும் உடல் பகுதியில் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இவர்களை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சென்ற வேப்பங்குப்பம் காவல்துறையினர் மற்றும் டிஐஜி காமினி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சிம்பா மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஏற்காடு தம்பதி கொலை வழக்கு.. 3 பேர் கைது.. காரணம் என்ன.. விசாரணையில் பகீர்!
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொலையாளியை தேடி வருகின்றனர்.