லவ் மேரேஜ்.. மகளுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா!
உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
Recommended Video
ஆம்பூர்: தன் பேச்சையும் மீறி, மகள் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த அப்பா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி விட்டார்.
ஆம்பூர் அடுத்துள்ள பகுதி குப்பராஜபாளையம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு 21 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார். மகள் மீது சரவணனுக்கு கொள்ளை ஆசை.
கடந்த சில வருடங்களாகவே மகள், சுப்பிரமணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகம் என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணி வேறு சாதி என்பதால் மேலும் எதிர்ப்பு கூடியது.
எப்படியும் இவர்கள் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று நினைத்த இந்த ஜோடி, வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர். இந்த விஷயம் சரவணனுக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்.
எப்போது தன் பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்தாரோ, அப்போதோ அவர் தனது மகள் இல்லை, இறந்துவிட்டார் என்று சரவணன் முடிவெடுத்தார். இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அடித்து ஊரெல்லாம் ஒட்டிவிட்டார்.
அந்த போஸ்டரில் மகளின் போட்டோ உள்ளது. மேலும், "அன்புமகள் அகால மரணமடைந்துவிட்டாள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம், அவளது உடல் இன்று மாலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது"என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் ஊருக்குள் பரபரப்பு ஏற்பட்டது.