சிறுபான்மை மக்களுக்காக அதிமுக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்துகிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
வேலூர்: சிறுபான்மையின மக்களுக்காக அதிமுக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என பொய் பிரச்சாரங்களை திமுக செய்வதாக குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி மீது சில நாடுகள் வெறுப்பில் உள்ளன. அந்த நாடுகள் தான் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்களை தூண்டி விடுகின்றன. ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பலவற்றிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில், வெளிநாட்டு சதி உள்ளது.
வெளிநாட்டு சக்திகள் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களுக்கு பணம் கொடுத்து போராட்டங்களை தூண்டி விடுகின்றனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே மத்திய அரசு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை வேண்டும். முதல்வர் எடப்பாடி நாட்டு மக்களுக்காக அரசியல் நடத்துகிறார்.
2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பழனிசாமி தான் முதல்வர் ஆவார். முதல்வர் பதவி எடப்பாடியாருக்கு தேடி வந்தது.
காவிரி, கச்சத்தீவு, பாலாறு உட்பட அனைத்து பிரச்சனைகளிலும் பல சட்ட போராட்டங்களை நடத்தி, தமிழக உரிமைகளை நிலைநிறுத்துவதில் அதிமுக அரசு எப்போதும் முன்னணியில் இருக்கும்.
மேலும் புதிய கல்வி கொள்கையில் இந்தியை மூன்றாவது மொழியாக கற்று கொள்ளலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என எதிலும் கூறவில்லை.
பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு தான் உள்ளது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மேலும் அதிமுக ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வேலூர் தேர்தல் முடிவு இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.