இறக்குமதி குறைந்தது... ஏற்றுமதி உயர்ந்தது... மேக் இன் இந்தியா திட்டம் பற்றி ஆளுநர் பேச்சு
Recommended Video
வேலூர்: பாரத பிரதமர் மேக் இன் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு
நாட்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இன்று இந்திய பொருளாதார சங்கத்தின் 101 வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து அவர் பேசியதாவது: கட்டிடங்களை கட்ட நிலத்தை அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்த்து உயரமான கட்டிடங்களை கட்ட முன்வர வேண்டும். அதற்கு வல்லுனர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
வெளிப்படை தன்மை
நாட்டின் வளர்ச்சிக்கு வெளிப்படையான தன்மை வேண்டும். அதே நேரத்தில் நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டும். 17ம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சி 24.4 ஆக இருந்தது அந்த வளர்ச்சி 1947ம் ஆண்டில் 24.2 சதவீதமாக இருந்தது. எனவே நாட்டின் வளர்ச்சிக்கு வெளிப்படையான தன்மை மற்றும் நேரம் திட்டமிடுதல் மிக அவசியமாக அமைந்துள்ளது.
முழு பயன்
சுதந்திரமடைந்த பின்பு கடந்த இரண்டு தலைமுறைகளாக நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், பொதுத்துறை நிறுவனங்களில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதன் பின்பு உலகமயமாக்கல் கொள்கை வந்த பின்பு இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தில் அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. பாரத பிரதமர் மேக் இன் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு இந்தியாவுக்கு முழு பயன் கிடைத்துள்ளது.
ஏற்றுமதி அதிகரிப்பு
இந்த திட்டத்தினால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு பொருளாதாரத்தில் வளார்ச்சி அடைந்துள்ளனர்.
முதலீடு அதிகரிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்து இருப்பதால் நாட்டின் பணவீக்கம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கல்வியின் வளர்ச்சி அதிக அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. உலக அளவில் கல்வியின் வளர்ச்சி 27 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் கல்வி வளர்ச்சி 48 சதவீதமாக உள்ளது. எனவே பொருளாதார வல்லுனர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.