அன்று ரஜினிக்கு வக்காலத்து.. இன்று அப்படியே பல்டி.. சொந்த கருத்து என்று ஒதுங்கிய எச். ராஜா!
பழனி: ரஜினிக்கு வக்காலத்து வாங்கி வரும் எச்.ராஜா, இப்போது, அப்படியே பிளேட்டை திருப்பி போட்டு பேசி உள்ளார்.
வேலூர் தொகுதி தேர்தலில் ரஜினி மன்றத்தினர் ஆதரவு தர போகிறார்களாமே என்று சில தினங்களுக்கு முன்பு, கேஎஸ் அழகிரியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
எம்ஜிஆர்
இதற்கு அழகிரியோ, ரஜினிகாந்த் ரசிகர்களால் ஒன்றும் நடந்து விட போவதில்லை. சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை முதலில் ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டும். எம்ஜிஆருக்கு பிறகு சினிமாவில் யாருமே அரசியல் வானில் ஜொலிக்கவில்லை. எனவே அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம். இதை நான் அவருடைய ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன்" என்று ஓபனாகவே சொல்லி இருந்தார்.
தகுதி இல்லை
இதற்கு முதல் ஆளாக வந்து கருத்து சொன்னவர் எச்.ராஜாதான். பாமகவின் பிம்பம் என்பதாலோ அல்லது கூட்டணி கட்சிக்கு சாதகமான விஷயம் என்பதாலோ தெரியவில்லை, "ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் தகுதி கே.எஸ்.அழகிரிக்கு இல்லை" என்று சொல்லி இருந்தார்.
சூர்யா
இந்நிலையில்தான் நடிகர் சூர்யாவின் புதிய கல்வி கொள்கை விவகாரம் எழ ஆரம்பித்தது. இந்த விவகாரம் எழுந்த நாள் முதல் இப்போது வரை ட்விட்டரில் சூர்யாவை வறுத்தெடுத்து கொண்டிருப்பது எச்.ராஜாதான். ஒருநாளைக்கு 2, 3 ட்வீட்கள் போட்டு கேள்வி எழுப்பி வருகிறார். நேற்று சென்னையில் நடந்த விழாவில் சூர்யா பற்றி பேசிய ரஜினிகாந்த், "சூர்யாவின் கருத்தை வரவேற்கிறன். சூர்யா சொன்னது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளது, நான் வேறு தனியாக எடுத்து சொல்ல வேண்டுமா" என்று சொல்லி விட்டார்.
சொந்த கருத்து
இது எச்.ராஜா மட்டுமில்லை.. அதிமுக, மற்றும் பாஜக தலைவர்களே எதிர்பாராத ஒன்றுதான். சூர்யாவின் பேச்சு, அதை பற்றி ரஜினியின் கருத்து பற்றி எச்.ராஜாவிடம் பழனியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எச்.ராஜா, "தேசிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா கருத்தை வெளியிட்டுள்ளார். அது அவருக்குரிய கருத்தாக தெரியவில்லை. யாரோ சொல்லிக் கொடுத்து பேசியதாக தெரிகிறது.
மும்மொழி கொள்கை
ஏழை மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக தான் தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. 20 மாணவர்கள் உள்ள பள்ளிகள் மூடப்படுவதாக கூறுவது பொய்யான தகவல். மும்மொழி கொள்கை, தேசிய கல்விக்கொள்கை என்பதெல்லாம் புதிது கிடையாது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்டவை தான். ஆனால் அப்போது யாரும் எதிர்ப்பு சொல்லாமல் இப்போது எதிர்க்கிறார்கள். இது மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் செய்யும் வேலை. ரஜினியும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அது அவரது தனிப்பட்ட விஷயம்" என்றார்.
ஒருவேளை சூர்யாவின் கருத்தை ரஜினி எதிர்த்திருந்தால், எச்.ராஜா என்ன சொல்லி இருப்பாரோ?!