வேலூரில் மெகா சைஸ் ஆலங்கட்டி மழை.. கொரோனாவை மறந்து மக்கள் மகிழ்ச்சி
வேலூர்: வேலூரில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்த நிலையில் கொரோனாவை மறந்து அதை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடினர்.
Recommended Video
வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக பெரும் மழை வருவதுபோல் கருத்த மேகங்கள் ஒன்றுகூடி பின்பு மழை இல்லாமல் காற்று மட்டும் வீசிவிட்டு பொதுமக்களுக்கு ஆட்டம் காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் இருந்து வெயிலூர் என்று பெயர் எடுத்த வேலூரில் வெயில் வாட்டி எடுத்தது.
பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் வானம் கருத்து நேற்று முன் தினத்தை போல் நேற்றும் மழை வரும் சூழ்நிலை நிலவியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்யாவிட்டாலும் பல இடங்களில் சுமார் 1 மணி நேரம் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது.
பொதுவாக ஆலங்கட்டி மழை 1 செமீ அளவுக்கு குறைந்து தான் இருக்கும். ஆனால் நேற்று கொட்டிய ஆலங்கட்டி 3 செமீ விட்டத்திற்கு மேல் இருந்து உள்ளது.
கொரோனா பாதிப்பால் வீட்டிற்குள் அடைபட்டு பெரும் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்த பொதுமக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலை தந்து உள்ளது. ஆலங்கட்டி மழையை சிறுவர் முதல் பெரியவர் வரை சேகரித்து அதை தமது செல்போனில் படம்பிடித்து அதை பலருக்கு அனுப்பி தங்களின் மகிழ்ச்சியை தெரியபடுத்தினர்.
அதே சமயத்தில் நிலத்தில் விதைவிதைக்க மண்ணை பதப்படுத்த நல்ல ஈரப்பதத்தை இந்த மழை கொடுத்தாலும் 144 தடை உத்தரவால் வேலைக்கு ஆட்கள் யாரும் வரமாட்டார்களே என்ற வேதனையில் விவசாயிகள் உள்ளனர்.