வேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு! - வீடியோ
Recommended Video
வேலூர்: வேலூரில் 3-ஆவது நாளாக கனமழை கொட்டி வருவதால் திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளத்தில் வானத்தை பிளந்து கொண்டு கொட்டுவது போல் மழை கொட்டி வருகிறது.
இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன் தினம் முதல் மழை பெய்து வருகிறது.
வடதமிழகம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூரில் நேற்று முன் தினம் இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
தண்ணீர் தேக்கம்
இதனால் வேலூர் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புதிய பஸ் நிலையம், கிரீன் சர்க்கிள் உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகள் மழைநீர் ஆறுபோன்று ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
பாதுகாப்பான இடம்
கன்சால்பேட்டை, இந்திராநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. அங்குள்ள வீடுகளுக்குள் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது. அதில் இருந்தவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
பள்ளி, கல்லூரி
காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, அரக்கோணம் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகளை வெள்ளநீரக் சூழ்ந்ததால் நேற்று வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
வேலூரில் இன்று 3-ஆவது நாளாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயத்தில் 151 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆம்பூர் அருகே கானாற்றில் இருந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததில் வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இன்னும் மழை வெளுத்து வாங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.