அத்துமீறியது ஏன்... பதில் தேவை... வாணியம்பாடி அதிகாரிக்கு மனித உரிமை ஆணையம் கிடுக்கிப்பிடி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஆய்வு நடத்தச் சென்ற போது அத்துமீறலில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பழக்கடைகளை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வியாபாரிகளை தரக்குறைவாக நடத்தினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் அந்த அதிகாரி மீது வழக்குத் தொடர்ந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்னும் 14 நாட்களுக்குள் பழக்கடைகளை சேதப்படுத்தியது தொடர்பாக நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ் மாநில மனித உரிமை ஆணையத்திடம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறலுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் அந்த அதிகாரி இன்று வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மாநில மனித உரிமை ஆணையம் இதில் தலையிட்டுள்ளதால் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே சிசில் தாமஸின் செயல்பாடுகள் வரம்பு மீறிய ஒன்று என்றும், இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.
நீங்க அதிகாரியா... ரவுடியா... வாணியம்பாடி அதிகாரியை அழைத்து வெளுத்து வாங்கிய அமைச்சர்
வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளதை மற்ற உள்ளாட்சி அதிகாரிகளும் கவனிக்கத் தவறவில்லை. இதனிடையே இந்த நிகழ்வு உணர்த்துவது என்னவென்றால், வரம்பு மீறி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் அது கேடில் கொண்டு சென்று விடும் என்பது தான். வியாபாரிகளே தவறு செய்திருந்தாலும் கூட அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கலாம், அல்லது எச்சரிக்கை விடுத்திருக்கலாம். அதைவிடுத்து பழக்கடை முழுவதுமே துவம்சம் செய்தது மனிதநேயத்திற்கு அழகில்லாதது.