ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
வேலூர்:‛‛எனக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் கிடையாது. இதுவரை நான் மது அருந்தியதே கிடையாது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை நான் மறுத்துவிட்டேன்'' என அமைச்சர் துரைமுருகன் கலகலப்பாக பேசினார்.
வேலூர்மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்கள் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் தனக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இல்லை என தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை! மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு -துரைமுருகன்
மதுப்பழக்கம் கிடையாது
துரைமுருகன் பேசுகையில், ‛‛பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் தமிழக அரசுக்கு நாள் ஒன்றிற்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இருந்தாலும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது. நான் எம்எல்ஏவாக இத்தனை ஆண்டுகாலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படிதான் அனைவரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இங்கிலாந்து நாட்டில் சுற்றுபயணம் செய்த போது ராணி எலிசபெத் மது விருந்து கொடுத்தார். ஆனால் நான் அதனை மறுத்துவிட்டேன். இதுவரை மது அருந்தியதே கிடையாது''என்றார்.
சட்டவிரோதமானது
அதன்பிறகு துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது: காவிரி நதிநீர் ஆணையத்தில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும், தமிழகம் பின்னனியில் உள்ளது போலும் உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு சொல்வதும் தவறு. காவிரி மேலாண்மை ஆணையம் சொல்வதும் தவறு. உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அதிகாரங்களை சொல்லியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் தன்னிச்சையாக செயல்படுவது சட்டவிரோதமானது.
மேகதாது விவகாரத்தை நீக்கியது மகிழ்ச்சி
சுற்றுசூழல்துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது சென்னையில் வடிகால்களை மேம்படுத்த உள்ளாட்சித்துறை நீர்வளத்துறை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அதில் உரிய பணம் ஒதுக்கி பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. பணிகள் மழைகாலத்திற்குள் முடியும். தமிழக முதல்வர் 28ல் ஆம்பூர் வந்து திருப்பத்தூர் விழாக்களில் பங்கேற்கிறார். பின்னர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை திறக்கிறார். அதன்பின் நலத்திட்டங்களை வழங்குகிறார். மறுநாள் ராணிப்பேட்டையில் விழாக்களை முடித்துவிட்டு சென்னை செல்கிறார்.
ஆதரவு கேட்காத பாஜக
ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் யஷ்வந்த் சின்காவை ஆதரிக்கிறோம். சமூக நீதியில் திமுக ஈடுபாடு உள்ளவர்கள். பாஜக பழங்குடி வகுப்பை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளனர். பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சி நாங்கள் தான். ஆனால் எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லை'' என்றார்.