துரைமுருகன் யாரை இப்படி சொல்கிறார்.. திமுக கூட்டணியில் திருப்பம் வருமா?
வேலூர்: காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது தனித்துப் பிரச்சாரம் செய்வதற்கு இப்போதாவது முடிவெடுத்தார்களே அதற்கு பாராட்டுக்கள், எங்களை நம்பி புதிய கட்சிகள் யாரேனும் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தப்பில்லை என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
Recommended Video
வேலூரில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய துரைமுருகன், நாங்கள் 'வேல்' ஐ கையிலெடுத்தாலே சூரசம்ஹாரம் நடந்தே தீரும் என்றும் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் பழைய காட்பாடி மற்றும் தாராபடவேடு ஆகிய இடங்களில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
வேல்
அப்போது அவர் கூறுகையில், 'வேல்' ஐ நாங்கள் கையில் எடுத்தால் சூரசம்காரம் நடந்தே தீரும். பகுத்தறிவு உள்ளவர்களுக்கு பக்தி இருக்க கூடாதா? பகுத்தறிவு என்றாலே கடவுள் இல்லை என்று அர்த்தம் இல்லை. அதையும் பகுத்தறிவோடு பார்ப்பதே பகுத்தறிவு.
பேரறிவாளன் விடுதலை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம். தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு முன்பு நல்ல முடிவை கொடுத்துவிட்டு பெருமையாக நடந்து கொள்வார் என நம்புகிறோம்.
ஆளுநர் ஆட்சி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை எதிர்த்து ஆளுநர் ஒரு ஆட்சியை நடத்தி வருகிறார். துணைவேந்தரை பதவி நீட்டிப்பு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் அனுமதி அளித்துள்ளார் என்றார்.
ஜெயலலிதா நினைவிடம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு திமுக பங்கேற்குமா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், எங்களை அழைக்க மாட்டார்கள் நாங்கள் செல்ல மாட்டோம் என்று கூறினார். திமுக கூட்டணி உள்ள தோழமை கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் எங்களை நம்பி புதியவர்கள் யாரேனும் வந்தாலும் இணைத்து கொள்வதில் தவறு இல்லை என்றார்
காங்கிரஸ்
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து பிரச்சாரம் செய்தது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் இப்போதாவது இந்த முடிவு எடுத்தார்கள் அதற்கு பாராட்டுகள் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதியவர்கள் வந்தால் சேர்ப்போம் என்று துரைமுருகன் கூறுவதை பாமகவையா என்ற கேள்வி எழுகிறது.