வேலூரில் மீண்டும் வருமான வரித்துறை முற்றுகை.. திமுக பிரமுகர் வீட்டில் அதிரடி சோதனை.. அடுத்து என்ன?
வேலூர்: வேலூர் தொகுதிக்குட்பட்ட திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்கள் முன்பு திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லம், மற்றும் கல்லூரிகளில் அதிரடி வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றன. இதன்பிறகு, துரைமுருகனுக்கு நெருக்கமான, பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமென்ட் குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில பல கோடி பணம் சிக்கியது.
வார்டு வாரியாக எங்கெங்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று அதில் எழுதி வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று வேலூர் நகருக்கு உட்பட்ட, விரிஞ்சிபுரத்தில் திமுக முன்னாள் ஊராட்சி செயலாளர் பாலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
வேலூர் மார்கபந்தீஷ்வரர் நகரிலுள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இதேபோல, வேலூர், காட்பாடியிலுள்ள கனரா வங்கி மேலாளர் தியாகராஜன் வீட்டிலும், திருச்சி, வையம்பட்டியிலுள்ள கல்பனா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கரூரில் தனியார் கல்லூரி பங்குதாரரின் வீடு மற்றும் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வேலூரை மையம் கொண்டு மீண்டும் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறுவது அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறை சோதனைகள் மற்றும் பண பறிமுதல் காரணமாக வேலூரில் தேர்தல் ரத்தாகும் சூழல் எழுந்துள்ளது.