கனிமொழி வந்திருந்தால் கதை மாறியிருக்கும்.. வருத்தத்தில் திமுக தொண்டர்கள்
Recommended Video
வேலூர்: கடும் போராட்டத்திற்கு பிறகு வேலூர் லோக்சபா தொகுதியை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில்தான், திமுக முக்கிய தலைவர் கனிமொழி பிரச்சார களத்திற்கே வராமல் இருந்ததன் பலன் இது என்று முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.
பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அக்கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.
கதிர் ஆனந்த் தனது அரசியல் வாழ்க்கையில் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், திமுகவினர் பம்பரமாக சுழன்று அவரது வெற்றிக்காக பாடுபட்டு வந்தனர்.
குறைந்த ஓட்டு
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கதிர் ஆனந்த். பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த லோக்சபா பொதுத் தேர்தலின்போது பல தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்த திமுகவால், இம்முறை, சொற்ப வாக்குகளில்தான் வெல்ல முடிந்துள்ளது. இதற்கு கனிமொழி பிரச்சாரத்திற்கு வராதது முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
களம் வராத கனிமொழி
திமுகவின் இளைஞரணி செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் கூட, வேலூர் தொகுதியில், நிறைய இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. ஆனால், கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி களத்துக்கே வரவில்லை. திமுக தொண்டர்கள் நடுவே இதுதொடர்பாக வாத விவாதங்கள் எழுந்துள்ளன.
என்ஐஏ சட்டம்
வேலூர் தொகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். சமீபத்தில் லோக்சபாவில் என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக திமுக வாக்களித்ததால் முஸ்லிம்களும், திமுகவின் நிலைப்பாடு மீது அதிருப்தியில் உள்ளனர். அதே நேரம் அந்த மசோதா மீதான வாக்கெடுப்பின்போது பங்கேற்காத ஒரே திமுக எம்பி கனிமொழி மட்டுமே. அவர் அந்த நேரத்தில் அவையில் இருப்பதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே வேலூருக்கு கனிமொழி வந்து பிரச்சாரம் செய்திருந்தால் சிறுபான்மையினர் வாக்குகளை இன்னும் அதிகமாக பெற்றிருக்க முடியும்.
வெற்றியின் பலன்
லோக்சபா தேர்தல் டிரென்ட்படி பார்த்தால், எப்படியும் திமுக வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று திமுக தலைமை நினைத்துக் கொண்டது. அந்த வெற்றியின் முழு பலனையும், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகிய இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வேலூர் தொகுதியில் உதயநிதி அதிக அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேலூர் தொகுதி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தால் தான் வெற்றி கிடைத்தது என்று ஒரு செய்தி மக்களிடமும், திமுக தொண்டர்களிடமும் சென்று சேரும் என்பது இந்த பிளான் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது வாரிசு அரசியல் என்ற எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாகவே தெரிகிறது. எனவே கனிமொழி களத்துக்கு வந்திருந்தால், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் இன்னும் அதிகமாக திமுகவுக்கு வந்திருக்கும் என்று புலம்புகிறார்கள் திமுக தொண்டர்கள்.