வேலூரில் எதிர்பார்த்த படி போட்டி... திமுக சார்பில் மீண்டும் களமிறக்கப்பட்ட கதிர் ஆனந்த்
வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது.
அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இரண்டு கட்சிகள் சார்பிலும் ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களே மீண்டும் போட்டியிடுகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கினார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். அவரை எதிர்த்து திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் திமுக உறுப்பினருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறையினரின் சோதனையில் ரூ.11 கோடிக்கு மேல் பணம் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த ஆணையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஏ.சி.சண்முகம். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அந்த தொகுதியில், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள் - ஜூலை11
- கடைசி நாள் - ஜூலை 18
- வேட்புமனு பரிசீலனை நாள் - ஜூலை 19
- வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் - ஜூலை 22
- தேர்தல் நடக்கும் நாள் - ஆக.,5
ஓட்டு எண்ணிக்கை ஆகஸ்ட் 9 அன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில், எதிர்பார்த்தபடி மீண்டும் ஏ.சி. சண்முகம், கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.