"லெக் பீஸ் எங்கே".. ஆம்பூர் பிரியாணி கடைகளில் அலை மோதும் கரை வேட்டிகள்.. டெய்லி பஞ்சாயத்தாம்!
ஆம்பூரில் லெக் பீஸ் பிரியாணிகளுக்கு தட்டுப்பாடு என்று கூறப்படுகிறது
ஆம்பூர்: "லெக் பீஸ் எங்கே.." என்று கேட்டு ஆம்பூரில் திமுக, அதிமுக கட்சிக்காரர்கள் தகராறு அடிக்கடி நடந்து வருகிறதாம்.
5-ம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் வலுவாக மோத உள்ளன.
ஒரு தொகுதியாக இருந்தாலும், இந்த தேர்தலின் வெற்றியானது அந்தந்த கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கவுரவ பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் இரு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வேலூர் தொகுதியில் முகாமிட்டு வருகின்றனர்.
நிர்வாகிகள்
அதிமுக தரப்பில், 30 அமைச்சர்கள், 3,000 நிர்வாகிகள் என்றால், திமுக சார்பில், 25 எம்பி.,க்கள் தலைமையில், 3,000 நிர்வாகிகள் குவிந்துள்ளனர். இவர்கள் எங்கெங்கு பிரச்சாரம் செய்கிறார்களோ அங்கேயே முகாமிட்டு தேர்தல் பணி செய்கிறார்கள்.
ஆர்டர்கள்
இப்போது, கட்சிக்காரர்களும் இங்குள்ள பிரியாணி கடைகளை ஆக்கிரமித்து விட்டார்கள். அதனால் பிரியாணி ரெடி வந்து, கொஞ்ச நேரத்திலேயே கடைகளில் காலி ஆகி விடுகிறது. இது போக, நிறைய ஆர்டர்களை முன்னமேயே கட்சி தரப்பில் தந்துவிட்டு போகிறார்கள்.
லெக் பீஸ்
அந்த பிரியாணிகளில் லெக் பீஸ் இல்லையாம்.. நேற்றுகூட இரு கட்சிக்காரர்களில் சிலர் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாமல் பல கடைகளில் தகராறு செய்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் ஆயிரம், 2 ஆயிரம் பிரியாணிக்கு ஆர்டர் வந்தால் எத்தனை பேருக்குதான் லெக் பீஸ் தர முடியும்? பெரிய பீஸ் சிக்கன் வைத்தாலும் நிறைய பேர் லெக் பீஸ்தான் கேட்கிறார்கள் என்கிறார்கள் கடைக்காரர்கள்!
செம பிஸி
கட்சிக்காரர்களுக்கு பிரியாணியும், லெக் பீஸும் சென்றுவிடுவதால், உள்ளூர்வாசிகளுக்கு சில சமயம் கிடைக்காமலேயே போய்விடுகிறதாம். ஆனால் எப்படி பார்த்தாலும், 5-ந்தேதி வரை பிரியாணி கடைகள் எல்லாம் ஆம்பூரில் செம பிஸிதான்!