பாருங்கய்யா செம்ம பிளான்.. வேலூரில் போட்டியில்லை... ஆனால்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி முடிவு
வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை என அறிவித்துள்ளது.
வேலூர் லோக்சபா தேர்தல் வரும் ஆகஸ்டு 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் , அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,"நடந்த முடிந்த லோக்சபா தேர்தலின் போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா சட்டவிரோதமாகவும், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
மேற்குறிப்பிட்ட வழக்குகளில் எந்தவித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்னரே மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல்களின் மீது தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கின்றது.
இந்த சூழலில் மக்களின் நம்பிக்கையினை காப்பது மிக முக்கியம் எனவே அப்பணிகளில் மக்கள் நீதிமய்யம் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறது. எதிர்வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதால் மக்கள் நீதி மய்யம் வேலூர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கட்சியின் செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது" இவ்வாறு தெரிவித்துளளார்.