ஆட்டோ டிரைவர் மேல் ஆசை... இடைஞ்சலாக இருந்த கணவன், குழந்தைக்கு சமாதி கட்டிய தீபிகா
கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவன், குழந்தையை கொன்று ஏரியில் புதைத்து விட்டு எதுவுமே தெரியாதது போல நாடகமாடியிருக்கிறார் ஒரு பெண்.
Recommended Video
வேலூர்: காமம் கண்ணை மறைக்க குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்ற குன்றத்தூர் அபிராமியைப் பார்த்து தமிழகமே அதிர்ந்தது. அந்த அதிர்வலைகளை ஓயும் முன்பே ஆற்காடு அருகே தீபிகா என்ற பெண் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவனையும் ஒரு வயது குழந்தையையும் கொன்று ஏரியில் புதைத்திருக்கிறார். கொலை செய்த தீபிகாவையும், அதற்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் ஜெயராஜையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் நிர்மலா தம்பதியினரின் மகன் ராஜா எலக்ட்ரீசனாக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடை அடுத்த தாஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த தீபிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரணீஸ் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. கடந்த 13ஆம் தேதி முதல் தனது கணவரையும், குழந்தையையும் காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் கூறி அழுதிருக்கிறார். அதை உண்மை என்று நம்பி ராஜாவின் அக்கா லட்சுமி, அவரது சகோதரர் தீபிகா வீட்டிற்கு வந்தனர். தீபிகாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
காட்டிக்கொடுத்த ரத்தக்கறை
வீட்டின் படுக்கை அறையில் ரத்தக்கறையை பார்த்து ராஜாவின் அக்காவிற்கு சந்தேகம் வரவே அதைப்பற்றி கேட்டனர். அதற்கு தீபிகா மழுப்பலாக பதில் கூறவே சந்தேகம் அதிகமானது. இதனையடுத்து தம்பியையும், குழந்தையையும் காணவில்லை என்று ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.
கொலையும் செய்வாள்
காவல்துறையினரின் விசாரணை முதலில் தீபிகாவிடம் இருந்துதான் தொடங்கியது. முதலில் சரியான பதில் கூறாத தீபிகா, பின்னர் காவல்துறையினரின் கவனிப்பில் ஒவ்வொன்றாக கூறத் தொடங்கினார். அந்த வாக்குமூலம் காவல்துறையினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடித்து விட்டு அடித்ததால் கணவனை கல்லைப்போட்டு கொன்றதாகவும் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று இருவரையும் புதைத்தாகவும் கூறினார்.
கூட இருந்து உதவியது யார்
புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், குழந்தையை கொன்றதாக கூறினாலும் உடல்களை புதைக்க தனியாக சென்றிருக்க முடியாது என்று சந்தோகப்பட்ட போலீசார், அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் கொலைக்குக் காரணம் குடி குடும்ப சண்டை மட்டுமல்ல கள்ளக்காதலும் இருக்கிறது என்று தெரியவந்தது.
கள்ளத் தொடர்பு
காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் குழந்தை பிறக்கும் வரை நிம்மதியாக போன வாழ்க்கை ஒரு கட்டத்தில் கசந்து போனது. தினமும் குடித்து விட்டு வந்து சண்டை போடுவார். அப்போது சத்யா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் வந்து சமாதானம் செய்வாராம். அடிக்கடி ஜெயராஜ் வந்து போகவே, தீபிகா உடன் நெருக்கம் அதிகமானது.
கள்ளக்காதலுக்காக கொலை
காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜாவை கழற்றி விட்டு விட்டு ஆட்டோ ஜெயராஜுடன் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டார் தீபிகா. கடந்த வாரம் இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் ராஜாவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். ஒரு வயது குழந்தை என்றும் பார்க்காமல் கழுத்தை நெரித்து கொன்றார். உடல்களை ஜெயராஜ் மூலம் அப்புறப்படுத்தி விட்டு காணமல் போனதாக நாடகமாடியுள்ளார்.
ஆட்டோ ஜெயராஜ் கைது
கொலையை மறைத்து விட்டு இருவரும் சேர்ந்து வாழ திட்டம் போட்டிருக்கின்றனர். ஆனால் ஆண்டவன் கணக்கு வேறாக இருக்கிறது. ரத்தக்கறையை வைத்து தீபிகாவையும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயராஜையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்கெட்ச் போட்டு கொலை
ராஜாவையும் குழந்தையையும் கொல்ல இருவரும் சேர்ந்து திட்டம் போட்டுள்ளனர். ஆனால் தீபிகா தனியாக கொலை செய்து விட்டு தன்னிடம் சொன்னதாக ஜெயராஜ் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கள்ளக்காதலுக்காக கொலை செய்தவர்கள் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.