ஊராட்சி சபை கூட்டம் ஏமாற்று வேலை.. ஒரு கோரிக்கையை கூட திமுகவால் நிறைவேற்ற முடியாது- அமைச்சர் பொளேர்
வேலூர்: திமுக நடத்தும் ஊராட்சி சபை கூட்டம் வெறும் ஏமாற்று வேலை. ஒரு கோரிக்கையை கூட திமுகவால் நிறைவேற்ற முடியாது என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வேலூர் புதிய மீன் மார்கெட் அருகே 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பன்முக மருத்துவமனை மற்றும் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மாவட்ட ஆட்சியர் சி.இ.ராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது முதல் கட்டமாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 7000 மதிப்புடைய 50 நாட்டு கோழிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வீரமணி கூறுகையில்
இது வரை அதிமுகவுக்கு சாதகமான எந்த தொலைகாட்சியும் கருத்து கணிப்பு வெளியிடவில்லை.
புஸ்வானம்
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் வெளியான கருத்துக் கணிப்புகளை அதிமுக தவிடு பொடியாக்கியது. அதேபோல் வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் கருத்துக் கணிப்புகளை புஸ்வானம் ஆக்குவோம்.
கிராம சபை கூட்டம்
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கடந்த காலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த முறை நாடாளுமன்றத்தை முன்னிறுத்தி கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார்.
கிராம சபை கூட்டம்
கிராம சபையில் மக்கள் தெரிவிக்கும் ஒரு கோரிக்கையாவது தி.மு.கவால் நிறைவேற்ற முடியுமா?
ஆக தேவையில்லாமல் மக்கள் கண் துடைப்புக்காகவும் மக்களை ஏமாற்றுவதற்காகவும் தேர்தல் வாக்குகளை பெறுவதற்காகவும் மக்களை திசை திருப்பவும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
காலதாமதம்
அரியூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு நேரில் சந்தித்து பணிகளை முடிக்க வற்புறுத்துவோம்.
மேலும் காலதாமதம் அதிகமாகும் பட்சத்தில் இதற்குமுன் இருந்தது போல் கேட்வசதி ஏற்படுத்தி பொதுமக்கள், ஆம்புலன்ஸ் செல்ல ஏதுவாக வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.