சாலையோரம் குளிரில் நடுங்கிய மூதாட்டி... சால்வை கொடுத்த அமைச்சர் நிலோபர் கபீல்...!
வேலூர்: வாணியம்பாடி அருகே சாலையோரம் மூதாட்டி ஒருவர் குளிரில் நடுங்கிய நிலையில் இருந்ததை பார்த்த அமைச்சர் நிலோபர் கபீல், தம்மிடம் இருந்த புதிய சால்வை ஒன்றை அவரிடம் கொடுத்தார்.
வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற அமைச்சர் நிலோபர் கபீல் திடீரென நிம்மியம்பட்டு என்ற இடத்தில் தமது காரை நிறுத்தக் கூறிவிட்டு அதிலிருந்து இறங்கியுள்ளார்.
மேலும், 100 மீட்டர் வந்த வழியிலேயே நடந்து சென்றதை பார்த்த அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரி, என்னவோ ஏதோ என பதறித்துடித்து அமைச்சர் பின்னால் ஓடினர். ஆனால் அமைச்சரோ சாலையோரம் இருந்த மூதாட்டி ஒருவர் குளிரில் நடுங்கியப்படி இருந்ததை பார்த்து, நீங்கள் எந்த ஊர், குளிரில் ஏன் இப்படி இங்கு இருக்கிறீர்கள் என வினவினார்.
பாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி
அதற்கு பதில் அளித்த மூதாட்டி தனக்கு குடும்பத்தினர் ஆதரவு இல்லை எனக் கூறியிருக்கிறார். ஆதரவற்ற நிலையில் மூதாட்டி இருப்பதை அறிந்த அமைச்சர் நிலோபர் கபீல், அவரை பாதுகாப்பாக அழைத்துச்சென்று காப்பகத்தில் சேர்க்குமாறு தனது உதவியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், கட்சியினர் தமக்கு அணிவித்த புதிய சால்வைகளில் ஒன்றை காரில் இருந்து எடுத்துவந்து அவருக்கு கொடுத்தார். இதனிடையே மூதாட்டி சாப்பிடாமல் பசியோடு இருந்ததை அறிந்து தனது உணவைவும் அமைச்சர் கொடுத்து உதவினார்.