ஆட்சியை கலைக்க நினைத்தால் தூக்கிபோட்டு மிதித்துவிடுவோம்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை
வேலூர்: அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? என்றும் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சித்தால் அவரை பந்து மாதிரி தூக்கி போட்டு மிதித்துவிடுவோம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.
வேலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேவி குப்பம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "அதிமுக என்பது மனிதர் ஆரம்பித்த கட்சி இல்லை, புனிதர் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. மேலும் நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வென்றது. இதில் 13 என்பது பேய்களின் நம்பர், 9 என்பது நவ ரத்னங்கள் எனவே நவரத்னங்களை பெற்றுள்றோம்.
அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? கர்நாடகாவைப் போல் தமிழகத்தில் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சித்தால் அவரை பந்து மாதிரி தூக்கி போட்டு மிதித்துவிடுவோம். அவரை அரசியலை விட்டே வெளியேற்ற முடியும்.
திமுக மட்டும் தான் ரவுடி கட்சியா? நாங்களும் எல்லாவற்றையும் பார்த்துதான் வந்துருக்கோம், எந்த வேலையும் செய்வோம்" இவ்வாறு ஆவேசமாக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.