இங்கே நடப்பது.. லஞ்ச ஆட்சி.. கொள்ளையடிக்கும் ஆட்சி.. கொலைகார ஆட்சி.. ஸ்டாலின் பாய்ச்சல்!
கொலை, கொள்ளைகார ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
குடியாத்தம்: அதிமுக ஆட்சி, லஞ்ச ஆட்சி மட்டுமல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சியாகவும் நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியபோது மாநில அரசை கடுமையாக விமர்சித்து பேசினர். அப்போது அவர் சொன்னதாவது:
கிராமங்கள் அனைத்தும் கோவில் என்றால் நான் பக்தன். ஒரு பக்தனாக இங்கு வந்திருக்கிறேன். உங்கள் குறைகளை கேட்டு, விரைவில் அவற்றை தீர்த்து வைப்போம்.
அனாதை தொகுதி
என்னுடைய தொகுதி கொளத்தூருக்கு வாரத்துக்கு ஒருமுறை சென்று மக்களை சந்திப்பேன். ஆனால் இந்த குடியாத்தம் தொகுதி அதிமுகவின் பங்காளி சண்டையால் எம்எல்ஏ இல்லாத அனாதை தொகுதியாக உள்ளது. ஒரு வருடமாக இந்த தொகுதியை பற்றி பேச எம்எல்ஏ இல்லை.
உள்ளாட்சி தேர்தல்
வருகிற ஏப்ரல், மே மாதத்துக்குள் நிச்சயம் எம்பி தேர்தல் வந்துவிடும். அதனுடன் மற்ற 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. இதனிடையே சட்டமன்ற தேர்தலும் வருமோ என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. உங்களின் எதிர்பார்ப்பும் அதுதான். அப்போது கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்திவிட்டால் எங்கே திமுக வெற்றி பெற்றுவிடுமோ என்பதால்தான் தள்ளிப்போடப்பட்டே வருகிறது.
கோடிக்கணக்கில் லஞ்சம்
தமிழக சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 117 இடம் தேவை என்ற நிலையில், தற்போது அதிமுகவின் பலம் 113 ஆக உள்ளது. இன்னும் 10 நாளில் 11 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வர உள்ளநிலையில், எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.
கொடநாடு கொலை
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. ஆனாலும் இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சரே கேட்கிறார். அதேபோல, கொடநாடு கொலை சம்பத்தில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது என்று வாக்குமூலம் தருகிறார்கள்.
15 ரூபாய் இல்லை
அதனால் இந்த ஆட்சி லஞ்ச ஆட்சி மட்டுமல்ல, கொள்ளையடிக்கும் ஆட்சி மட்டுமல்ல, கொலைகார ஆட்சியாகவும் நடக்கிறது. தேர்தலுக்காக தமிழகத்திற்கு மோடி வந்து செல்கிறார். ஆனால் அவரது தேர்தல் வாக்குறுதியில் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவோம் என்றார். ஆனால் 15 ரூபாய் கூட செலுத்தவில்லை. எனவே வரப்போகும் தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும்" என்றார்.