நான் இந்துக்களுக்கு எதிரியல்ல.. மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை.. ஸ்டாலின்
சோளிங்கர்: நான் இந்துக்களுக்கு எதிரி என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அது தவறு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சோளிங்கரில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா கூறியுள்ளார். நாங்கள் ஆண்டவனுக்கு எதிராக நின்றவர்கள் இல்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. அவ்வாறு பொய் பிரசாரம் செய்கிறார்கள். இந்து மதம் மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை. கோயில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை.
உதவாதகரம்
தமிழ்நாட்டுக்கு கலைஞர் உதவும் கரமாக இருந்தார்; ஆனால் எடப்பாடி உதவாத கரமாக இருப்பதாக தெரிவித்தார். 18 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதிமுக பாமக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி கொள்கையற்ற கூட்டணி, பேரத்தின் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கங்களின் வரலாற்றில் முதல்முறை.. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காரணம் என்ன?
வன்முறை கட்சி
பாமகவினர் பேருந்துகளை கொளுத்துவது, பாலங்களை தகர்ப்பதுதான் அவர்களின் வேலை. பாமக வன்முறை கட்சி என்று சட்டசபையில் ஜெயலலிதா கூறியுள்ளார். பாமகவினரை விமர்சித்து ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ள கருத்துகள் அவைக்குறிப்பில் இருக்கிறது.
வன்னியர் நலன்
வன்னியர்களின் 87 சொத்துக்களை காப்பாற்றியவர் கருணாநிதி. வன்னியர் சமுதாய நலனுக்காக டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்யவில்லை. பல்வேறு இடங்களில் உள்ள வன்னியர் அறக்கட்டளையின் சொத்துக்களை தமது துணைவியார் பெயரில் பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதி வைத்துள்ளார்.
ரெய்டு
தேர்தல் நேரத்தில் துரைமுருகன் மகன் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். திமுக பிரசாரத்தை தடுக்கவே எங்கள் கட்சி நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. மிசா, பொடா சட்டங்களையே பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் திமுக அஞ்சாது என்றார் ஸ்டாலின்.