அடக்க முடியாமல் அழுத ஸ்டாலின்.. சோகத்தில் மூழ்கிய திமுகவினர்.. காத்தவராயன் இறுதிச் சடங்கில்
வேலூர்: திமுக எம்எல்ஏ காத்தவராயன், இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற அந்த கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
குடியாத்தம், சட்டசபை தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன்.
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காத்தவராயன் நேற்று மறைந்தார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி சடங்கு பேரணாம்பட்டில், இன்று நடைபெற்றது.
மார்ச்சில் 'பிகே' கொடுக்க போகும் ரிப்போர்ட்.. காத்திருக்கும் ஸ்டாலின்.. திமுக எடுக்கும் அஸ்திரம்!
காத்தவராயன் இறுதிச் சடங்கு
இதில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு சென்றிருந்தனர். அப்போது ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த, காத்தவராயன் உடலைப் பார்த்து மிகவும் துக்கத்தோடு காணப்பட்டார் ஸ்டாலின். அவரது முகமே வாடிப்போய்விட்டது. விம்மிப்போய் இருந்தார்.
ஸ்டாலின் அழுகை
இதன் பிறகு, ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் சற்று தள்ளி ஓரிடத்தில் அமர்ந்து இருந்தனர். அப்போது, எதையோ யோசித்தவர் போல காணப்பட்ட ஸ்டாலின், துக்கம் தாங்காமல் கண்ணீர் சிந்தி அழுதார். இருப்பினும், கண்ணீரை தனது கைகளால் துடைத்துக் கொண்டார். இந்த காட்சி, அங்கிருந்த ஊடகத்தினரின் கேமராக்களில் தப்பவில்லை. காத்தவராயன் மற்றும் அதற்கு முந்தைய நாளில் கே.பி.பி.சாமி என இரு எம்எல்ஏக்களை 2 நாட்களில் இழந்திருந்தது திமுக. அந்த சோகம் ஸ்டாலினை ரொம்பவே வாட்டியுள்ளது போல.
சோகம்
இதனிடையே, ஸ்டாலின் துக்கம் தாங்காமல் அழுததைப் பார்த்த திமுகவினரும் சோகத்தில் அழுது விட்டனர். இதனால் அந்த இடமே சோகத்தில் மூழ்கியது. முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி மறைவின்போது இப்படித்தான் ஸ்டாலின் கதறி கதறி அழுதார். அந்த காட்சி பார்ப்போர் நெஞ்சை கரைப்பதாக இருந்தது.
உணர்ச்சி
சொந்த தந்தை என்பதால் ஸ்டாலின் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு விட்டார் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால், இப்போது தனது கட்சியை சேர்ந்த, ஒரு எம்எல்ஏவின் மறைவுக்கும் இவ்வாறு ஸ்டாலின் அழுதுள்ளார். ஸ்டாலினுக்கு, இயல்பாகவே இரக்க குணம் அதிகம் என்றும், அது தான் இதுபோன்ற துக்கமான சமயங்களில் அவரையும் மீறி வெளிப்பட்டு விடுகிறது என்றும் கூறுகிறார்கள் அந்த கட்சியினர்.