நீங்கள் இல்லாமல் வாழ முடியாது.. கணவரை இழந்த பெண் கடிதம் எழுதி தற்கொலை முயற்சி.. குழந்தை பலி
வேலூர்: வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி செய்ததில் ஒரு குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் உறவினர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியது.
வேலூர் தோட்டப் பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார். இவருடைய மனைவி கோமதி (27), மகன் நித்தில்குமார் (5), மகள் ரியாஸ்ரீ (3). கடந்த மாதம் நெஞ்சுவலி ஏற்பட்டு நரேஷ்குமார் இறந்தார்.
இதனால் கோமதி கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டார். இரவு குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
சிகிச்சை பலனின்றி
கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டிலிருந்த கொசு மருந்தை மகன், மகளுக்கு கொடுத்தார். பின்னர் அதை அவரும் குடித்தார். மயங்கிக் கிடந்த 3 பேரையும் அவரது குடும்பத்தினர் மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரியாஸ்ரீ இறந்தார்.
கோமதி
கோமதியும் அவரது மகனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கோமதி அவரது உறவினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. என்னால அவர் இல்லாமல் வாழ முடியவில்லை. சின்ன சின்ன விஷயம் அவரை ஞாபகப்படுத்துகிறது. அவர் இல்லாத வாழ்க்கையை என்னால சத்தியமாக வாழ முடியாது. அவர்தான் எங்க உலகமே.
2 பிள்ளைகள்
அவர் யாருக்குமே கஷ்டம் கொடுக்காம வாழனும்னு சொல்லுவாரு. அதனால நானும் என் 2 பிள்ளைகளும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம சந்தோசமா மேலோகத்தில் வாழப்போறோம் என கூறியுள்ளார்.
பரபரப்பு
வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தோட்டப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.