என்னை கடத்துகிறார்கள்.. காருக்குள் அமர மறுத்த முகிலன்.. பரபரப்பு
வேலூர்: என்னை கடத்துகிறார்கள் என கூறி வேலூர் போலீஸாருடன் முகிலன் செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அவர்களை கட்டுப்படுத்த முயன்று முடியாததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் அநியாயமாக பலியாகினர். இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதை ஆதாரத்துடன் சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
நாகர்கோவில்
அதில் காவல் துறை உயரதிகாரிகள் குறித்த வீடியோ ஆதாரங்களும் இருந்தன. இதையடுத்து அன்றைய தினம் இரவே சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு செல்லும் ரயிலில் முகிலன் புறப்பட்டார். அப்போது அவர் நாகர்கோவிலை வந்தடையவில்லை.
விசாரணை
இதையடுத்து முகிலன் மாயமானது தெரியவந்தது. அவரை கண்டுபிடித்துத் தரக் கோரி அவரது மனைவி பூங்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
காட்பாடி
இந்த நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் நேற்றிரவு ஆந்திர ரயில்வே போலீஸாரால் முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து அவரை நேற்றிரவு 11 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
முகிலன் ஒப்படைப்பு
பின்னர் அவரை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து ஆலோசனை செய்தனர். இதையடுத்து அவரை வேலூர் போலீஸிடம் ஒப்படைக்கலாம் என முடிவு செய்து வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாரிடம் நள்ளிரவு 12 மணிக்கு முகிலன் ஒப்படைத்தனர். வேலூர் போலீஸார் முகிலனை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
வலுக்கட்டாயம்
தகவலறிந்த முகிலன் ஆதரவாளர்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் திரண்டனர். அப்போது போலீஸாருடன் செல்ல முகிலன் மறுத்தார். இதையடுத்து தரதரவென வலுக்கட்டாயமாக போலீஸார் இழுத்துச் சென்றனர்.
அடுக்கம்பாறை
அப்போது முகிலனை காரில் ஏற்றினர். காரில் ஏற மறுத்து திமிறிய முகிலன் தன்னை கடத்திச் செல்வதாக ஆவேசமாக கூறினார். எனினும் போலீஸார் அவரை கட்டாயப்படுத்தி அமர வைத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரபரப்பு
இதைத் தொடர்ந்து முகிலன் சென்னைக்கு இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டார். எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் அவரிடம்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.