ஜெயிலிலேயே இறந்துவிட்டால்.. ஒரு பக்கம் குளுக்கோஸ்.. மறு பக்கம் உருக்கம்.. போராடும் நளினி, முருகன்
முருகன், நளினி தொடர் உண்ணாவிரதம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்: உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன்-நளினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. இதனிடையே முருகன் தமிழக முதல்வருக்கு ஒரு உருக்கமான வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவரும் 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே கடந்த 5 மாதங்களாக காலந்தாழ்த்தி வருவதாலும், தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நளினி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
சாப்பிட மறுத்தனர்
இன்று நளினி 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன் இன்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இரண்டு பேருமே சிறை தரப்பில் சாப்பாடு கொடுத்தாலும் சாப்பிட மறுத்து வந்தனர்.
உடல்நலம் பாதிப்பு
உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் முருகன், நளினியுடன் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் அதற்கு செவிசாய்க்கவில்லை. தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிறை மருத்துவர்கள்
இதனால் நளினி, முருகன் நேற்றிலிருந்தே சோர்வுடன் இருப்பதாகவும், உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், கவனிக்க சிறை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் சிறை டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
குளுக்கோஸ்
இந்நிலையில், சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு முருகனுக்கு 2 பாட்டில், நளினிக்கு 2 பாட்டில் என 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
முருகன் உருக்கம்
இப்போது சிறை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருவரும் உள்ளனர். இந்த நிலையில், முருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், "நான் சிறையிலேயே இறந்துவிட்டால், என் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கடிதம் சிறை கண்காணிப்பாளர் மூலம் முருகன் முதல்வருக்கு அனுப்பி உள்ளார்.