எச்.ராஜா இப்படி பேசலாமா.. ஊரே ஒன்று திரண்டது.. போலீசில் பரபரப்பு புகார்
Recommended Video
வேலூர்: இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி ஆற்காடு நகர காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று கூறி விமர்சனம் செய்த, பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி பொதுமக்கள் சார்பில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கடந்த 15ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாஜக தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா, கமலின் பேச்சுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக இருப்பதாகவும், குறிப்பாக மேல்விஷாரம் பகுதியில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தால் இந்துக்கள் தனி பஞ்சாயத்து கேட்டு போராடுவதாகவும் பேசியுள்ளார்.
இந்த கருத்துக்கு மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவ்வாறு பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சிலர் புகார் மனுவினை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்தனர்.
புகாரை பெற்ற ஆற்காடு நகர போலீசார் அதன் மீது சி.எஸ்.ஆர் அடிப்படையில், புகாரை பதிவு செய்து அதன் நகலை பொதுமக்களிடம் அளித்தனர்.