வேலூர் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்தார் நளினி
Recommended Video
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் இருந்த நளினி இன்று ஒரு மாத கால பரோலில் வெளியே வந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து, தங்களை விடுதலை செய்ய கோரி, பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேரும் போராடி வருகின்றனர்.
இதற்கிடையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக பரோலில் செல்ல சட்டப்போராட்டம் நடத்தினார். அதன்படி, கடந்த 5-ந் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், சிறையிலிருந்து இன்று காலை வெளியே வந்தார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்க உள்ளார்.
இதற்கிடையில், நளினி தங்கும் வீடு குறித்த ஆவணங்களும் சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க கூடாது உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை, சிறைத்துறை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.