என்னை ஜெயிலில் இருந்து ரிலீஸ் பண்ணுங்க.. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நளினி
வேலூர்: இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்ணாவிரதம்
அதனால் விடுதலை செய்ய கோரி, முருகன், நளினி ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், அவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை.
பெண் கைதி நளினி
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதி என்று அவர் அதில் கூறியிருக்கிறார்.
முதல்வருக்கு கடிதம்
இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ளது.
ஏமாற்றமே மிஞ்சுகிறது
விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.