வரும்போதே மழையை கொண்டு வந்துருச்சுங்களே புள்ளீங்கோ.. செம உற்சாகத்தில் புது மாவட்ட மக்கள்!
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் இன்று உதயமாகின்றன
Recommended Video
வேலூர்: இன்று வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் பிறந்துவிட்டன.. புது மாவட்டங்கள் வரும்போதே நல்ல மழையும் பெய்து வருவதால் இந்த புது மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். அதை விட உற்சாகமாக கொட்டும் மழையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்து அசத்தி விட்டனர். முதல்வரும் உற்சாகமாக அதை பெற்றுக் கொண்டார்.
வேலூர் மாவட்ட நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவித்திருந்தார்.
வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிப்பது என்பது மிகப்பெரிய வருவாய்த் துறையினருக்கு மிகப்பெரிய சவாலான காரியம். மாவட்டத்தை பிரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அப்போதே கூறப்பட்டது.
3-ஆக பிரிப்பு
தேவைக்கு ஏற்ப அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சில வட்டங்களை புதிய மாவட்டங்களுடன் இணைக்கும் வேலைகள் ஆரம்பமாயின. இனி மாவட்டத்தை மூன்றாக பிரிப்பதால் அரசின் திட்டப் பணிகளை சுலபமாக கவனிக்க முடியும் என்றும், அரசுப் பணிகளில் தொய்வு இருக்காது, இதன்மூலம் மக்களுக்கு மிகப்பெரிய பலன்தான் என்றும் நம்பப்படுகிறது.
டாக்டர் ராமதாஸ்
முக்கியமாக இப்படி மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்தது டாக்டர் ராமதாஸ்தான்.. அதனால்தான் இப்படி உஒரு அறிவிப்பு வெளியானபோதே பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடவும் செய்தனர். இதனையடுத்து புதிதாக உருவாக்கப்படுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் நிர்வாக பணிகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
உற்சாகம்
இந்த நிலையில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்திலும் மழை சூப்பராக பெய்து வருகிறது. குறிப்பாக புது மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டையிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் புது மாவட்ட மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். மாவட்டங்கள் புதிதாக பிறக்கும்போதே நல்ல மழையும் வந்துள்ளதால் அதை நல்ல விஷயமாக மக்கள் பார்க்கிறார்கள். மாவட்டப் பிரிவினை என்பதும், பிறப்பு என்பதும் உற்சாகம் அளிக்கக் கூடியதாக உள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
வரவேற்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கொட்டும் மழையில் வேலூர் சென்றார். அவருக்கு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் முதல்வர் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கழக தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உரை
இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை துவங்கி வைத்து முதல்வர் பேசியபோது சொன்னதாவது: "புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை. ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆன்மீக தலங்கள், சுற்றுலா தலங்கள் கணிசமாக உள்ளன.
திருப்பத்தூர்
புதிய மாவட்டமாகியுள்ள திருப்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் வேளாண்மை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் சொந்த காலில் நிற்க உதவிய அரசு அதிமுக அரசு. மேலும் தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின் தடையில்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்று உரையாற்றினார்.
மகிழ்ச்சி
புதிய மாவட்டங்கள் இன்று தொடங்கப்பட்ட அதே வேளையில், அரக்கோணத்தில் கடையடைப்புப் போராட்டம் நடக்கிறது. அரக்கோணத்தை தலைமையிடமாக கொள்ளாமல் ராணிப்பேட்டையை தலைமையிடமா கொண்டு புது மாவட்டம் அமைவதால் இந்தப் போராட்டம்! எனினும், 20 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியை இந்த மக்கள் மழையுடன் வரவேற்று மகிழ்ந்து வருகின்றனர்.