பாவம்.. அவரே கலங்கிப் போய் என்னென்னமோ பேசுறாரு.. ஓபிஎஸ் விமர்சனம் பற்றி துரைமுருகன் கிண்டல்!
வேலூர் : ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர் துரைமுருகனை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ள துரைமுருகன், "பாவம்... அவர் கலங்கிப் போய் எதையெதையோ பினாத்திக் கொண்டிருக்கிறார்." எனன் கூறியுள்ளார்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில் துரைமுருகன் கிண்டலாக பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு ஆதரவாகவும், அமைச்சர் துரைமுருகனின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அறிக்கை விடுத்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் விமர்சனம் குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்துள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
திடீர் மீட்டிங்.. பேப்பர் ஃபைனல்.. 'புது ரூட்’ ஜெட் வேகத்தில் பறக்கும் ஓபிஸ் - குறுக்க வந்துறாதீங்க!
அடிக்கல் நாட்டு விழா
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே, பொன்னையாற்றின் குறுக்கே 40 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சியில், கைத்தறி நூல் துறை அமைச்சர் காந்தி , அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அணை கட்ட முடியாது
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "ஆந்திரா மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டாமல் இருக்க தமிழக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதனால் அணை கட்ட முடியாது. அப்படி அணை கட்ட முயற்சித்தால் வழக்கை துரிதப்படுத்துவோம்." என்றார்.
அதிமுக ஆட்சியில்
மேலும் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அணைகள், மதகுகள் பராமரிக்கப்படவில்லை. இதனால் கிருஷ்ணகிரி அணையில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறியது. பரம்பிக்குளத்திலும் மதகுகளின் கதவுகள் உடைந்து தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. தற்போது பழுதடைந்த மதகுகள், கதவுகள் சீரமைக்க அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
யாரோ விவரம் தெரியாத அமைச்சர்
திமுக பயங்கரவாதத்திற்கு துணை போவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அஸ்வினி குமார் குற்றம்சாட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அவர் யாரோ விவரம் தெரியாத அமைச்சர். எந்த காலத்திலும் பயங்கரவாதத்திற்கு திமுக துணை போனதில்லை. எங்கள் கொள்கையும் அது அல்ல என்றார்.
கலங்கிப் போய் எதையோ பேசுறார்
ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், "நானாவது இரட்டை வேடம் போடுகிறேன் என்கிறார். அவரோ பல வேடங்களைப் போடுபவர். பாவம்... அவர் கலங்கிப் போய் எதை எதையோ பினாத்திக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம்." எனத் தெரிவித்தார்.