டிக்டாக்கில் பெண்கள் குறித்து ஆபாச பேச்சு.. காவல் நிலையத்தில் குவிந்த மக்கள்.. ஆம்பூரில் பரபரப்பு
பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்: டிக்டாக்கில் பெண்களை ஆபாசமாக பேசி விமர்சித்த இளைஞருக்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டதால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. "வயசு பெண்களை எப்படி இவ்ளோ அசிங்கமாக பேசலாம்" என்று கேட்டு பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
ஆம்பூர் அருகே உள்ள கிராமம் சின்னவரிகம். இங்கு வசித்து வரும் இளைஞன்தான் ராஜா. 20 வயதாகும் ராஜா அங்குள்ள ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இளைஞர்களிடம் பிரபலமாகி வரும் டிக்டாக் வீடியோ மீது இவருக்கும் மோகம் அதிகம். சில தினங்களுக்கு முன்பு இளம் பெண்களை ஆபாசமாகவும், கொச்சையாகவும் பேசி டிக்-டாக் ஆப்பில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
வைரல் பேச்சு
மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்களை பகிரங்கமாக குறிப்பிட்டு இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் கடுமையாக வைரலானதையடுத்து அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
ராஜா கைது
இதையடுத்து போலீசாரே இந்த விவகாரத்தில் இறங்கினார்கள். உமராபாத் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வீடியோவை பதிவிட்டவரை தேடி வந்து கடைசியில் சம்பந்தப்பட்ட ராஜாவை கைது செய்தனர்.
முற்றுகை போராட்டம்
ராஜா கைது செய்யப்பட்டாலும், பொதுமக்களின் ஆத்திரமும், கோபமும் அடங்கவே இல்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த வயசு பெண்களை எப்படி இப்படியெல்லாம் ஆபாசமாக பேசலாம் என்று போராட வந்துவிட்டனர். கைது செய்யப்பட்ட ராஜா மீது கடுமையான சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் உமராபாத் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விட்டனர்.
பொதுமக்கள் திரண்டனர்
ராஜா மீது கடுமையான நடவடிக்கையை எடுத்தே தீர வேண்டும் என புகாரும் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலீசாரும் பொதுமக்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். இந்த சமயத்தில் "அப்படி என்ன தப்பா ராஜா பேசிவிட்டார்" என கேட்டு கைதானவருக்கு ஆதரவாக ஒரு குரூப் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டது. ராஜாவை விடுவிக்க வேண்டும் என்று சொல்லியும் முழக்கமிட்டது.
விஷமத்தனம்
இதனால் போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாகிவிட்டது. இரு தரப்பினரிடமும் போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தார்கள். பொழுது போக்கிற்காக டிக்டாக் வீடியோவில் எதையாவது பேசி பலர் தெரியாமல் மாட்டி கொண்டு முழிக்கும்போது, சிலர் இப்படி விஷமத்தனமான வேலைகளில் ஈடுபட்டு விடுகிறார்கள் என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.