3 ஆக பிரிச்சா வேலூரில் 'அது' இருக்காது... 2 மாவட்டங்களே போதும்.. மக்கள் ஆதங்கம்
Recommended Video
வேலூர்: வேலூர் மாவட்டத்தை பிரிப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில், மாவட்டத்தை 3 ஆக பிரித்தால் வேலூரில் தொழிற்சாலைகளே இருக்காது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். 2ஆக பிரித்தாலே போதும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என அறிவித்தார். இதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் சத்தியகோபால் தலைமையில் வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வியாழக்கிமை நடந்தது.
''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..!
பொதுமக்கள் மனு
இந்த கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் சப்-கலெக்டர்கள்(வேலூர்) மெகராஜ், (ராணிப்பேட்டை) இளம்பகவத், ஆர்டிஓ பார்த்தீபன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து, மனுக்களாக அளித்தனர்.
2ஆக பிரித்தால் போதும்
வேலூர் வணிகர் சங்க தலைவர் ஞானவேல் பேசுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை பகுதிகளில் அதிக தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்நிலையில், மாவட்டத்தை 3 ஆக பிரித்தால் இடையில் இருக்கும் வேலூரில் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு இருக்காது. எனவே, வேலூரை 2 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதேபோல், மாவட்டத்தை 2ஆக பிரிக்க வேண்டும் என்று பலரும் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
மாவட்ட எல்லை வரையறை
இதேபோல் மூன்று மாவட்ட எல்லை வரையறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டமும் நடந்தது. .அமைச்சர் கே.சி.வீரமணி, எம்பி முகமதுஜான், எம்எல்ஏக்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், நல்லதம்பி, சு.ரவி உட்பட பலர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
கூடுதல் தலைமை செயலாளர்
இந்த கூட்டங்களுக்கு பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் சத்தியகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க தாலுகாவை அடிப்படையாக கொண்டு பிரிப்பதா? அல்லது சட்டமன்ற தொகுதிகளை அடிப்படையாக கொண்டு பிரிப்பதா? என இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. தற்போது மாவட்டத்தை 3 ஆக பிரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. கருத்துக்கேட்பு அறிக்கையின் அடிப்படையில் மாவட்டம் வரையறை செய்யப்படும்' இவ்வாறு கூறினார்.