வேலூரில் தேர்தல்... பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வாரா... ஏ.சி. சண்முகத்தின் பதில் இதுதான்
வேலூர்: வேலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி வருவார் என புதிய நீதிக் கட்சி தலைவரும், வேலூர் தொகுதி வேட்பாளர் என எதிர்பார்க்கப்படுபவருமான ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, வேலூர் தொகுதியில் அதிக அளவில் பணபட்டுவாடா உள்ளது என புகார் எழுந்தது. இதனையடுத்து வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருமான வரித் துறை, மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில் 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இதனால் வேலூர் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. கடந்த தேர்தலின் போது திமுக கூட்டணி சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C. சண்முகம் போட்டியிட்டார்.
தேர்தல் பணிகள் தொடங்கியது
இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தலும், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 11ஆம் தேதியும் தொடங்க உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேற்று முதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. போட்டியிடவுள்ள கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
மோடி உறுதி
இந்த தேர்தலிலும், இரு அணிகள் சார்பில் ஏற்கனவே களமிறக்கப்பட்ட வேட்பாளர்களே களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளை நேற்று தொடங்கிய அதிமுக கூட்டணி வேட்பாளராக அறியப்படும் ஏ. சி. சண்முகம் பேசுகையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடியைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியின் போதே அவரிடம், வேலூர் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நீங்கள் சுற்றுப்பயணம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன்.
ஏ.சி. சண்முகம் உறுதி
தைரியமாகச் செல்லுங்கள், நிச்சயமாக வருகிறேன் என என்னுடைய தோளைத் தட்டிக்கொடுத்துக் கூறினார். ஆகவே தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் நிச்சயம் வருவார் என்று கூறியவர், இந்தியா முழுவதும் வாக்களிக்கும் போது நாம் மட்டும் வாக்களிக்க முடியவில்லை என்பதை வேலூர் தொகுதி மக்கள் அவமானமாகக் கருதினார்கள்.
வேலூர் ஸ்மார்ட் சிட்டி
திமுக வேட்பாளரால் தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. எனவே திமுகவின் மீதான வேலூர் மக்களின் கோபம் மாறாது என்று திமுகவை விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், வேலூர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் ரூ.500 கோடியிலும் நிறைவேற்றப்படலாம், ரூ.2,000 கோடியிலும் நிறைவேற்றப்படலாம்.
திட்டம் மாற்றப்படலாம்
வேலூரின் மக்களவை உறுப்பினர் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும்போது ரூ.3,000 கோடியாகவும் அந்தத் திட்டம் மாற்றப்படலாம். இப்படியெல்லாம் நடைபெற வேண்டும் என்றால் வேலூர் தொகுதி உறுப்பினர் மத்திய அரசை சார்ந்த ஒருவராக இருக்கும் போது தான் தொகுதி வளர்ச்சியடையும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்களும் வரும் என்று கூறினார்.