5 வயதில் அண்ணன்-தம்பி... 10 வயதில் பங்காளி.. வீதிக்கு வந்த அமைச்சர் வீட்டுச் சண்டை
வேலூர்: வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சொத்து தகராறு காரணமாக தாத்தா பெயரில் செயல்பட்டு வரும் பீடி கம்பெனிக்கு பேரனே தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.
பீடி கம்பெனியை தீ வைத்து கொளுத்தியது சொந்த அண்ணன் மகன் என்பதால் அமைச்சர் வீரமணி தரப்பில் இருந்தோ அவரது குடும்பத்தில் இருந்து எந்த புகாரும் போலீஸிடம் கொடுக்கவில்லை.
இதனிடையே அமைச்சர் வீரமணி குடும்பத்துக்கு சொந்தமான பீடி கம்பெனி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்ட அதிமுகவில் பேசுபொருளாக உள்ளது.
தப்பா அர்த்தம் பண்ணிட்டு.. குடும்பத்தோட டூர் போயிராதீங்க.. முதல்வர் போட்ட செம டிவீட்!
தீ வைப்பு
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன கோடியூர் கிராமத்தில் அமைச்சர் வீரமணி குடும்பத்திற்கு சொந்தமான பீடி கம்பெனி செயல்பட்டு வருகிறது. தந்தை சின்னராசு தொடங்கிய இந்த பீடி கம்பெனியை இப்போது அமைச்சர் வீரமணியின் அண்ணன் அழகிரி தான் நிர்வகித்து வருகிறார். வீரமணியுடன் பிறந்த மற்ற சகோதரரான ராவணன் 30 ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்துவிட்ட நிலையில், அவரது மகன் இந்திரஜித் பூர்வீக சொத்தில் பங்கு கேட்டு கடந்த ஒரு வருடமாகவே நச்சரித்து வந்துள்ளார்.
சொத்து
அமைச்சர் வீரமணி அரசியலில் படுபிஸியாக இருப்பதால் சொத்து விவகாரத்தில் அவர் தலையிட்டதில்லை. முழுக்க முழுக்க அமைச்சர் வீரமணியின் அண்ணனான அழகிரி தான் நிர்வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை சென்ற இந்திரஜித், தனது மூத்த பெரியப்பா அழகிரியை (அமைச்சரின் அண்ணன்) சந்திக்க முயன்றுள்ளார். ஆனால் அவரோ தம்பி மகன் இந்திரஜித்திடம் பேச விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
பெட்ரோல்
இதனால் கோபம் தலைக்கேறிய நிலையில் அருகாமையில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிய இந்திரஜித், சின்ன கோடியூரில் உள்ள பீடி கம்பெனிக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டு அங்கு தீ வைத்து விட்டு காரில் சென்னை புறப்பட்டுவிட்டார். இந்த தகவல் அமைச்சர் வீரமணியிடம் தெரிவிக்கப்பட்டும், அவர் சொந்த அண்ணன் மகன் என்பதால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பொறுமை காத்து வருகிறார்.
பரபரப்பு
அமைச்சர் குடும்பத்துக்கு சொந்தமான பீடி கம்பெனி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்ட ர.ர.க்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சரின் ஆதரவாளர்களும் இது பற்றி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இது குடும்ப விவகாரம் என்பதால் தனது ஆதரவாளர்கள் யாரும் இதில் தலையிட வேண்டாம் எனக் கறாராக கூறிவிட்டார் அமைச்சர் வீரமணி.