விடுதலை செய்யப்போவதில்லை.. என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்.. பிரதமருக்கு நளினி உருக்கமான கடிதம்
வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினி, தன்னை கருணை கொலை செய்யுமாறு பிரதமருக்கும், உயர்நீதிமன்றத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை விடுதலை செய்ய இவர்கள் விடுத்த கோரிக்கை தமிழக அமைச்சரவையால் ஏற்கப்பட்டாலும், ஆளுநரால் முடிவெடுக்காமல் இழுபறியில் உள்ளது.
இந்த நிலையில், நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் வேலூர் சிறையில் சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி நளினி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்.
தங்களுக்கு தமிழக சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதால் வேறு மாநில சிறைக்கு மாற்ற அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். வேலூர் சிறையில், முருகன் துன்புறுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். நளினி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று, சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நளினி கடிதங்களை எழுதியுள்ளார். அதில் 28 ஆண்டுகளாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை, இனிமேல் விடுதலை கிடைக்காது என்றே தெரிகிறது. எனவே, என்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று நளினி தனது கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
16 வயதுதான் மாணவிக்கு.. பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக போனார்.. நாசம் செய்த 4 நண்பர்கள்! கோவையில் கொடுமை
வேலூர் சிறையில் இன்று நளினியை சந்தித்து பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி, இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.