சிறையில் திங்கள்கிழமை இரவு நளினி தற்கொலைக்கு முயற்சி என வழக்கறிஞர் தகவல்
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நளினி திங்கள் கிழமை (நேற்று) இரவு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சிறையில் இருக்கும் சக கைதிகளுடன் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலைக்கு முயற்சித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது கணவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இவரது தற்கொலை முயற்சி குறித்து அவரது வழக்கறிஞர் புகழேந்தி தனியார் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''கடந்த 29 ஆண்டுகளில் முதன் முறையாக நளினி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சிறையில் நளினிக்கும் உடன் அடைக்கப்பட்டு இருக்கும் மற்றொரு ஆயுள் தண்டனை கைதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இதுகுறித்து சிறை அதிகாரியிடம் மற்றொரு கைதி தெரிவித்துள்ளார். இதனால், தற்கொலைக்கு நளினி முயற்சித்து இருப்பதாக தெரிகிறது.
இதற்கு முன்பு நளினி இதுபோல் நடந்து கொண்டது இல்லை. ஏன் அவ்வாறு நளினி நடந்து கொண்டார் என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக வேலூர் சிறையில் இருந்து நளினியை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது கணவர் முருகன் கோரிக்கை வைத்துள்ளார். சட்ட ஆலோசனைகள் இதற்கு தேவைப்படுகிறது. அறிந்த பின்னர் உடனடியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2021 சட்டசபை தேர்தல்: அதிமுக 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைக்குமா?
ஸ்ரீபெரும்புத்தூரில் 1991 மே 21ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்து இருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பையஸ் ஆகிய ஏழு பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு தடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. பின்னர் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.