12 நாட்கள் முருகன், 7 நாட்கள் நளினி உண்ணாவிரதம்... உடல்நலம் பாதிப்பால் போராட்டம் வாபஸ்
வேலூர்: வேலூர் சிறையில் முருகன், நளினி ஆகியோரின் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சிறைத்துறை அதிகாரிகளின் உறுதி மொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர். முருகன் கடந்த 12 நாட்களாகவும், நளினி 7 நாட்களாகவும் உண்ணாவிரதம் இருந்தனர்.
தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன் - நளினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, உள்ளிட்ட 7 பேரின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவு செய்தது.
இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றம் சென்றிருந்தது. இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், தமிழக அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்து வருகிறார். இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கு நளினி கடிதம் எழுதினார். அதில் இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டு இருந்தார்.