தேர்தலில் சின்னங்களை மாற்றி மாற்றி கொடுத்தால்.. வேலூரில் ஸ்டாலினை கலாய்த்த சீமான்
Recommended Video
வேலூர் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், சின்னங்களை எல்லாருக்கும் மாற்றி மாற்றி கொடுத்தால் ஸ்டாலினால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என கிண்டல் செய்தார்.
வேலூர் லோக்சபா தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வேலூர் சங்கரன்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சீமான் பேசுகையில், நாம் தமிழர் இயக்கம் தேர்தல் அரசியலை நோக்கி பயணத்தை புறப்படவில்லை என்றும், அமைப்பு ரீதியாக மாற்றத்தை உருவாக்கவே புறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தேர்தலில் சீர்திருத்தம் மிக அவசியம் என்று பேசிய சீமான், அமமுகவுக்கு முன்பு குக்கர் கொடுக்கப்பட்டநிலையில் பின்னர் பரிசு பெட்டி சின்னம் கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசினார். இப்படி எல்லா கட்சிகளுக்கும் தேர்தலுக்கு தேர்தல் சின்னங்களை மாற்றி மாற்றி கொடுத்தால் சிறந்த விஷயமாக இருக்கும் என்றார்.
ஆனால் சின்னங்களை மாற்றி மாற்றி தேர்தல் ஆணையம் கொடுத்தால் திமுக தலைவர் ஸ்டாலினால் ஞாபகம் வைத்து பேச முடியாது என்று கிண்டல் செய்தார்.
வேலூர் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் சென்றுவிடும் என்ற பயம் காரணமாகவே அதிமுக முத்தலாக் விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது என்றார். மேலும் அரசியலில் வெற்றி பெறுவோமா இதெல்லாம் நடந்திடுமா என்று எல்லோரும் யோசிப்பதாக தெரிவித்த சீமான், ஸ்டாலினே முதல்வராக முடியும் என நம்புவதாக விமர்சித்தார். அதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.