மருத்துவர் அய்யாவுக்கு ஆதரவாக நான் இருப்பேன்.. திடீரென குரல் கொடுத்த சீமான்.. பாமகவினர் உற்சாகம்
வேலூர்: பாமகவின் வன்னியர்கள் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கும், ராமதாஸ்க்கும் ஆதரவாக இருப்பேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். இது பாமகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தி வருகிறார். பலமுறைஅரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் யாருடைய உரிமையையும் தட்டிப் பறிக்க நினைக்க வில்லை. அப்படி செய்வது அறமல்ல என்பது சமூகநீதியை கொள்கை மூச்சாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் கேட்பது எங்களுக்கான உரிமையைத் தான்.
20 சதவீத இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் 21 உயிர்களை தியாகம் செய்தும் தான் வென்றெடுத்தோம். அது வன்னியர்களின் சொத்து ஆகும். ஆனால், அந்த சொத்தை, எங்களுக்கு கிடைக்கவிடாமல் யாரோ அனுபவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நாம் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டில் ஒரு பகுதியைக் கூட, இதுவரை அதை அனுபவித்து வரும் சமுதாயங்களின் நலன் கருதி விட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறோம்.
ஓயப் போவதில்லை
இவ்வளவுக்கு பிறகும் கூட நமக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம்? மக்களுக்கான அரசு நியாயத்தின் பக்கம் தானே நிற்க வேண்டும்? யாருக்கோ அஞ்சி, நமக்கான இடப்பங்கீட்டை வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாட்டாளிகளின் குரலாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய ''வசதியிருக்கிறவன் தரமாட்டான்.... - வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்'' என்ற வரிகள் நமது போராட்டத்திற்கும் பொருந்தும். ஆம்... வன்னியர்களுக்கான உள் இடப்பங்கீட்டை வென்றெடுக்கும் வரை நாம் ஓயப் போவதில்லை. அதற்காக என்ன விலை கொடுக்கவும், எத்தகைய தியாகங்களை செய்யவும் தயாராக இருக்கிறோம்" என்று ராமதாஸ் கூறினார். இனிடையே நேற்று ராமதாஸ் வெளியிட்ட கடிதத்தில் சத்திரிய போராட்டத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தொண்டர்களை அறிவுறுத்தினார்.
சீமான் அறிவிப்பு
இந்நிலையில் வேலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், வன்னியர்கள் இடஒதுக்கீடு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறி பாமகவினரை உற்சாகப்படுத்தி உள்ளார்.
அரசியல் காரணம்
வேலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், திமுக,அதிமுக, பாஜக ஆகியோர் "வேல்'ஐ கையில் எடுப்பது தேர்தலை கருத்தில் கொண்டு தான். பாஜகவினர் மாநிலத்திற்கு மாநிலம் கடவுளை முன்னிறுத்தி அரசியல் செய்கின்றனர் ஆனால் எங்களின் நோக்கம் தமிழ் கடவுளையும் பன்பாட்டையும் மீட்டெடுப்பது தான். முருகனின் "வேல்'ஐ யார் கையில் எடுத்தாலும் சரி எங்களின் நோக்கம் தமிழ் பண்பாடு என்பது தான்.
இடஒதுக்கீடு போராட்டம்
மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் அதே போல் விவசாயிகளின் நலன் கருதி விவசாய கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் தமிழக அரசு 7 தமிழர்களையும் தேர்தலையும் கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயத்திற்காகவாவது அவர்களை விடுதலை செய்ய வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை அப்படியிருக்க அவர் எப்படி மக்கள் பிரச்சனைகளை 100 நாளில் தீர்ப்பார். பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துகிறது அந்த போராட்டத்திற்கும் மருத்துவர் அய்யாவுக்கு ஆதரவாக நான் இருப்பேன்" இவ்வாறு கூறினார்.