2023-க்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக்கப்படும்.. துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்
ஆம்பூர்: தமிழகத்தில் வீடின்றி தவித்த 6 லட்சம் பேருக்கு இதுவரை வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மேலும் 6 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி தரப்படும் என கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு வாக்கு சேகரிக்கும் விதமாக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய ஓபிஎஸ் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு மாநிலத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்யும் ஒரே இயக்கமாக, அதிமுக திகழ்வதாக குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் சிறப்பான ஆட்சியை அதிமுக அரசு அளித்து வருகிறது.
மறைந்த ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தற்போதைய அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. எக்காலத்திலும் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படாது என உறுதிபட கூறினார்.
நாங்கள் வாக்குறுதி அளித்ததை விட கூடுதலாக நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். பொய்யான பல வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் கட்சி நாங்கள் அல்ல. அந்த வேலையை செய்யும் பழக்கம் திமுகவிற்கு தான் உள்ளது என சாடினார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் ஒரு மிகப்பெரிய நடிகர், பேசியே காரியத்தை சாதிப்பதில் வல்லவர். அவரை வேலூர் தொகுதி மக்கள் நம்ப வேண்டாம். ஏற்கெனவே திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் திமுகவுக்கு மீண்டும் வாக்களித்து ஏமாந்து விடாதீர்கள்.
வரும் 2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாறும் என்றார். 2023-க்குள் வீடில்லாத மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் உறுதியளித்தார்.
தமிழகம் குடிசை பகுதிகளற்ற கிராமங்களாகவும், பேரூராட்சிகளாகவும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளாக உருவாக்கப்படும் இதற்காக அடுத்தகட்டமாக 4.56 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.