வேலூர் அருகே பட்டாசுக் கடையில் பயங்கர தீ.. தாத்தாவுடன் தீயில் கருகி பலியான 2 பிஞ்சுக் குழந்தைகள்!
வேலூர்: வேலூர் மாவட்டம் லத்தேரி பஸ் நிலையத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை உரிமையாளர் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் 2 பேர் உயிரிழந்தனர்.
தீயில் சிக்கி பட்டாசு கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலானது.
கணவரின் உடலுக்கு அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி- விவேக்கின் மனைவி உருக்கம்
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம், மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வகுமார், குடியாத்தம் ஆர்.டி.ஓ மன்சூர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பட்டாசு கடையில் தீ விபத்து
வேலூர் மாவட்டம் லத்தேரி பஸ் நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலில் லேசாக பற்றி எரிந்த தீ அதன்பின்னர் தீவிரமாக கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அப்போது கடையில் இருந்த பட்டாசு கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக் குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
போராடிய தீயணைப்பு வீரர்கள்
திடீரென தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து கடைக்காரர்கள் வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் கோரத்தாண்டவம் கொடூரமாக இருந்ததால் தீ வேகமாக பரவியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க போராடினார்கள்.
கருகிய பிஞ்சுகள்
கடையின் உரிமையாளர் மோகன் உள்பட 3 பேரும் கடைக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கவும் தீயணைப்பு படையினர் போராடினார்கள். ஆனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி மோகன் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் தனுஷ்(7), தேஐஸ்(6) ஆகிய 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் நேரில் விசாரணை
மேலும் தீயில் சிக்கி பட்டாசு கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம், மாவட்ட போலீஸ் எஸ்.பி. செல்வகுமார், குடியாத்தம் ஆர்.டி.ஓ மன்சூர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.