ஆற்காட்டில் திருட வந்த வீட்டில் நகையும் இல்லை.. பணமும் இல்லை.. தோசை சுட்டு சாப்பிட்ட திருடர்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் திருட வந்த வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் அங்கிருந்த சாப்பாட்டை சாப்பிட்டதுடன், தோசையும் சுட்டு சாப்பிட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அபிராமி நகரில் வசிப்பவர் வினோத்குமார். இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.
நேற்று காலை வினோத்குமார் தனது மனைவி ரேவதி மற்றும் குழந்தையுடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். மாலையில் வீடு திரும்பி இருக்கிறார்கள்.
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் திருட்டு நடக்கவில்லை.
திருட வந்த இடத்தில் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடர்கள் சமையலறைக்கு சென்று அங்கு சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பாடு குறைவாக இருந்ததால், அங்கிருந்த மாவை எடுத்து தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்கள்.
இதுகுறித்து வினோத்குமார் ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தோசை சுட்ட திருடர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.