உடம்பெல்லாம் கத்தி குத்து.. ரத்தம் வழிந்து நின்ற 3 பசு மாடுகள்.. ஆம்பூரில் பரபரப்பு!
ஆம்பூர் அருகே 3 பசு மாடுகளை சரமாரியாக வெட்டி உள்ளனர்
ஆம்பூர்: சும்மா கிடந்த 3 பசு மாடுகளை யாரோ கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.. இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் அருகே உள்ளது ரத்தினம் நகர். இங்கு வசித்து வருபவர் சோட்டாபாய். 40 வயதான இவர் ஒரு விவசாயி. அதனால் சொந்தமாகவே இவர் 5 மாடுகளை வைத்துள்ளார். இதற்காக வீட்டு பக்கத்திலேயே ஒரு தொழுகையும் கட்டி உள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல், நேற்றிரவும் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு சோட்டாபாய் தூங்க போய்விட்டார். இன்று அதிகாலை திடீரென பசு மாடுகள் கத்திய சத்தம் கேட்டு அலறி அடித்து கொண்டு எழுந்தார்.
இதனால் ஓடிச்சென்று கொட்டகையில் பார்த்தால், 3 பசு மாடுகளை மர்ம கும்பல் ஒன்று நுழைந்து கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். பசு உடம்பெல்லாம் சரமாரியான வெட்டு விழுந்திருந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் 3 மாடுகளுமே கத்தியவாறே இருந்தன. இந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துவிட்டனர்.
பின்னர் அவர்களின் உதவியுடன் 3 பசு மாடுகளையும் மீட்டு ஆம்பூர் கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார் சோட்டாபாய். அங்கு மாடுகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சோட்டாபாய் ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் இதுசம்பந்தமாக புகாரும் அளித்தார்.
பசு மாடுகளை வெட்டியது யார் என்று தெரியவில்லை. யாராவது சோட்டாபாய் மீது பொறாமை பிடித்து இந்த காரியத்தை செய்தார்களா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.