'நானே வீதி வீதியாக சென்று ஆய்வு நடத்துவேன்.. ஜாக்கிரதை.. ' அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கறார்
வேலூர்: காலதாமதமாக நடந்து வரும் வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், தானே களத்தில் இறங்கி வீதி வீதியாக ஆய்வு செய்வேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை நடந்தது.
நைட் ஷோ பார்த்துவிட்டு திரும்பி வந்த பெண்ணை.. கடத்தி சென்று பலாத்காரம்.. கான்ஸ்டபிள் முருகன் கைது
70% சதவிகிதம் மட்டுமே
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்நேரம் வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முழுமையாக முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் 70 சதவிகித வேலைகள் மட்டுமே முடிந்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் முறையாக வேலை செய்யவில்லை. எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து, அதனை அவர்கள் துணை ஒப்பந்தம் கொடுத்துள்ளனர்.
முறைகேடாகத் துணை காண்ட்ராக்ட்
பெரிய நிறுவனம் என்பதால் ஒப்பந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் முறையாக பணிகளைச் செய்யாமல் வேறு நிறுவனங்களுக்குத் துணை காண்ட்ராக்ட் வழங்கியுள்ளனர். இது விதிமுறைகளுக்கு முரணானது. இதனால் தான் இங்கு எந்த பணிகளும் சரியான நேரத்தில் முடிவில்லை.
ஒப்பந்ததாரர்கள் அலட்சியம்
ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் வேலூர் மாநகராட்சியில் ஒரு தெருகூட சேறும் சகதியுமில்லாமல் இல்லை. குறிப்பாக காட்பாடி பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஸ்மார்ட்சிட்டி பணிகள் என்று கூறி முதலில் பள்ளத்தைத் தோண்டுகிறார்கள், அதை மூடி சாலை அமைக்கப்படுகிறது. மீண்டும், மற்றொரு தரப்பு அதே பகுதி சாலைகளைத் தோண்டுகிறது. இதனால் குடிநீர் வாரியம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து அதனைச் சரி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் ஏனோ தானோ என்று தான் வேலை செய்கிறார்கள்.
ஆய்வு செய்தோம்
இதையெல்லாம் ஆய்வு செய்துள்ளோம். அதன் பின்னரே தற்போது அவசர அவசரமாகத் தெருக்களில் பள்ளங்களை மூடுகிறார்கள். வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். மேலும் இதுவரை முடிக்கப்பட்ட பணிகள் என்ன? தாமதமாகியுள்ள பணிகள் என்ன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் விரைந்து நடக்க வேண்டும்.
நாளே களத்தில் இறங்குவேன்
டிசம்பர் 12ஆம் தேதி நானே வீதி வீதியாகச் சென்று மாநகராட்சி சாலைகளை ஆய்வு செய்வேன். அதற்குள் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள வேலூர் மாநகராட்சி ஆணையரிடம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு அணை
மேலும், முல்லைப் பெரியாறு அணை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்க முடியாது எனக் கேரள அரசு கூறியது. ஆனால் அதையும் மீறி 142 அடி தண்ணீரைத் தேக்கி நாங்கள் சாதனை படைத்துள்ளோம். நான்காவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.